தாறுமாறாக ஓடிய கார் மோதி விபத்து: கணவன் கண்முன்னே மனைவி பலி
காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகே தாறுமாறாக ஓடிய கார் மோதிய விபத்தில் கணவன் கண்முன்னே மனைவி பரிதாபமாக இறந்தார்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், செம்மங்குடி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த கீதா பிரியா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இருவரும் பல்லவன் கிராம வங்கியில் அலுவலராக பணிபுரிந்து வருகின்றனர்.
சென்னையிலிருந்து தொடர் விடுமுறை காரணமாக சேத்பட்டுக்கு காஞ்சிபுரம் வழியாக சென்றபோது ரங்கசாமி குளம் அருகே உள்ள மருந்தகத்தில் இருவரும் மருந்து வாங்கிக் கொண்டு வெளியே வந்தனர். அப்போது தேரடி சாலையாக வழியாக வந்த கார் தறிகெட்டு ஆட்டோ மீது மோதி நடைபாதையில் பாய்ந்ததில் வங்கி ஊழியர் கீதபிரியாவின் மீது பலமாக மோதி அருகில் இருந்த கடையின் நடைபாதையை உடைத்துக் கொண்டு நின்றது.
அவ்வழியாக சென்றவர்கள் கடை ஊழியர்கள் என யாரும் சற்றும் எதிர்பாராத நிலையில் இந்த விபத்து நிகழ்வை கண்ட பொதுமக்கள் உடனடியாக காரின் கீழே சிக்கி இருந்த கீதப்பிரியாவை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்று முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கீதபிரியா உயிரிழந்தார்.
திருமணமான இரு மாதங்களில் மனைவியை கண்முன்னே இழுந்த கணவர் அழுதுகொண்டே இருந்த காட்சி மருத்துவமனையில் இருந்த அனைவரையும் கலங்க செய்தது.
சம்பவ இடத்திற்கு வந்த விஷ்ணு காஞ்சி காவல்துறையினர் விபத்துக்குள்ளான கார் மோட்டார்சைக்கிள் அனைத்தையும் பறிமுதல் செய்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். காரை ஓட்டி வந்த காஞ்சிபுரம் குமார் தெருவை சேர்ந்த மதன் என்பவர் தற்போது காவல்துறையிடம் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது..