கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
HIGHLIGHTS
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 06.09.2021 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பகுத்தறிவு பகலவன் போற்றப்படும் ஈ.வே.இராமசாமி அவர்களின்அறிவுச்சுடரை போற்றும் விதமாக அவரது பிறந்த தினமான செப்டம்பர் 17-ஆம் நாளை ஆண்டுதோறும் "சமூக நீதி நாளாக" கொண்டாடுவது என்று தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது என சட்டவிதி 110-ன் கீழ் அறிவித்தார்கள்.
அதனை தொடர்ந்து, இன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூக நீதி நாளாக அனுசரித்து உறுதிமொழி ஏற்க தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சித்தவைர் அவர்கள் தலைமையில் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற அன்பு நெறியும் - யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைபிடிப்பேன், சுயமரியாதை ஆளுமைத் திறனும் - பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும், சமத்துவம், சகோதரத்துவம், சமதர்பம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக்கொள்வேன், மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும், சமூக நீதியையே அடித்தளமாய்க் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்" என்று அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
உறுதிமொழி நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.விஜய்பாபு, திட்ட இயக்குநர் மரு.இரா.மணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் டி.சுரேஷ் மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.