ஈரோடு மாநகராட்சி சுதந்திர தின விழாவில் கொடியேற்றினார் மேயர் நாகரத்தினம்
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில், மேயர் நாகரத்தினம் தேசிய கொடியேற்றினார்.
ஈரோடு மாநகராட்சியின் சார்பில் 77வது சுதந்திர தினத்தையொட்டி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் நாகரத்தினம் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
நாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றி வைத்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும் சிறப்பாக பணியாற்றிய அரசு அதிகாரிகளுக்கு விருதுகளையும் வழங்கி பேசினார். இதே போல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்கள், மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் சார்பிலும் இன்று சுதந்திர தின விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அந்த வகையில், ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் 77வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார் வரவேற்று பேசினார். துணை மேயர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் ஜானகி ரவீந்திரன் தலைமை தாங்கி பேசினார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மேயர் நாகரத்தினம் கலந்து கொண்டு மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றி அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். ஈரோடு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, இடையன்காட்டுவலசு பள்ளி குழந்தைகள் கொடி வணக்கப்பாடலை பாடினர். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாநகர நல அலுவலர் நன்றி கூறினார்.
விழாவில் அனைத்து மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu