கடலூர் மாநகராட்சியில் மறு தேர்தல் நடத்தக்கோரி அ.தி.மு.க. கலெக்டரிடம் மனு
கடலூர் மாநகராட்சியில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சர் எம். சி. சம்பத் மனு அளித்தார்.
HIGHLIGHTS
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழகம் முழுவதும் நடைபெற்றது. நேற்று தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் கடலூர் மாநகராட்சியில் தி.மு.க. கூட்டணி முப்பத்தி நான்கு இடங்களை கைப்பற்றியது. அ.தி.மு.க 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
மாநகராட்சித் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகவும், மறு தேர்தல் நடத்த வலியுறுத்தியும் முன்னாள் அமைச்சர் எம். சி. சம்பத் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியத்தை சந்தித்து மனு அளித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சம்பத் கூறுகையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்குப் பதிவின்போது தி.மு.க. பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட னர். இந்த நிலையில் நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையின் போதும் கடலூர் நகராட்சியில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறையின் சாவி தொலைந்து விட்டதாக கூறுகிறார். இதே சந்தேகத்தை எழுப்பும் வகையில் உள்ளது, ஏனெனில் வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய தினம் ஒரு ஆம்புலன்ஸ் பள்ளியின் வெளியே நின்று கொண்டிருந்ததாகவும் யாரோ வந்து சென்றதாகவும் கூறப்படுகிறது இது மேலும் சந்தேகத்தை எழுப்புகிறது.
26 ஓட்டு 6 ஓட்டு 30 ஓட்டு, என குறைவான ஓட்டு வித்தியாசத்தில் எங்களது வேட்பாளர்கள் தோற்று உள்ளனர், அ.தி.மு.க. கடலூர் மாநகராட்சியில் 20 இடங்களில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டு இருந்த நிலையில் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருப்பது நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வருகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி ஆணையரும் தான் பொறுப்பேற்க வேண்டும். மேலும் ஓ. பன்னீர்செல்வம் கூறியது போல இது செயற்கை தேர்தல் என்றும், ஜனநாயக முறைப்படி எதுவும் நடைபெறவில்லை எனக் குற்றம் சாட்டினார்.மேலும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிடில் நீதிமன்றத்தை நாடி நீதி கேட்போம் எனக்கூறினார்.