செந்துறை சந்தை குத்தகை ஒத்திவைப்பு: அரசு நிர்ணயத்தொகை அதிகம் என புகார்
செந்துறை நகர சந்தை குத்தகை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அரசு நிர்ணய தொகை அதிகம் என குத்தகை எடுக்க முன்வந்தோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் செந்துறை நகரில், வாரம் தோறும் செவ்வாய் கிழமையன்று காய்கறி மற்றும் கால்நடை சந்தை கூடுவது வழக்கம். கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சந்தைகள் முறையாக இயங்காததால் குத்தகை விடுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சந்தைக்கான குத்தகை இன்று நடைபெறும் என ஊராட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஊராட்சித் தலைவர் செல்லம்கடம்பன் தலைமையில் குத்தகைக்கு விட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சந்தையை குத்தகை எடுக்க செந்துறை நகர அரசியல் பிரமுகர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் என 133 பேர் டெபாசிட் செய்திருந்தனர்.
இதையடுத்து குத்தகை நிர்ணயத்தொகை ரூ.6 லட்சம் என ஏல அதிகாரி தனவேல் தெரிவித்தார். குத்தகை கேட்க வந்தவர்கள் அரசு நிர்ணய தொகை அதிகம் எனக்கூறி யாரும் குத்தகை எடுக்கவில்லை. குத்தகை தொகையை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு குத்தகை நிர்ணயத்தொகை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு, குத்தகை ஒத்தி வைக்கப்பட்டது.