அரியலூர் பள்ளிகளில் முககவசம், கை கழுவுதல், சமூக இடைவெளி அவசியம்
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள் முககவசம் அணியவும், சோப்பு போட்டு கைகளை கழுவுதல், சமூக இடைவெளி அவசியம் பின்பற்ற வேண்டும். இதனை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
HIGHLIGHTS
அரியலூர் : அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், பள்ளிகளில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் த.ரத்னா தலைமைதாங்கினார். அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் தலைமைஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் த.ரத்னா பேசுகையில், கடந்த ஆண்டு தமிழகம் உட்பட உலக முழுவதும் கொரோனா வைரஸ் அதிகமாக இருந்த காரணமாக ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்ததைத்தொடர்ந்து, கல்லூரி மற்றும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
மேலும், கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் வந்தபோதிலும் அனைத்து கல்லூரி மற்றும் பள்ளிகளும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, பள்ளி மற்றம் கல்லூரிகளுக்கு வருகை தரும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்ட பிறகே பள்ளி கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்பட்டன. மேலும், அனைத்து மாணவ, மாணவிகளும் முககவசம் அணியவும், சோப்பு போட்டு கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுரை வழங்கி செயல்படுத்தப்பட்டது.
மேலும், மாணவ, மாணவிகள் அனைவரும் தனித்தனியே குடிநீர் மற்றும் உணவு பொருட்களை கொண்டு வரவும் அறிவுரைகள் வழங்கப்பட்டு, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தற்சமயம் தமிழகம் உட்பட சில மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்ற தமிழக அரசால் உத்தரவிடப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக கல்வி கற்க அதிக அளவில் வருகை தரும் மாணவ, மாணவிகளின் நலனில் மிகுந்த அக்கரைக்கொண்டு தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றிட கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, ஆசிரியர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாணவ, மாணவிகளுக்கு முன்மாதிரியாக இருந்து, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக அறிந்துகொண்டு தங்களது மாணவ, மாணவிகளுக்கும் தெரிவித்து, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் த.ரத்னா தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், திட்ட அலுவலர் சுந்தர்ராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பூங்கோதை, துணை இயக்குநர் ஹேமசந்த்காந்தி மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டனர்.