அரியலூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்து மேதின பேரணி நடத்த முடிவு
அரியலூரில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் மே தின பேரணி நடத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி.ஒருங்கிணைப்பாளர் த. தண்டபாணி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
8மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என உலக உழைப்பாளர்களுக்கு உறுதிப்படுத்திய தொழிலாளர் தினமான 136 வது மே தின விழா பேரணி பொதுக்கூட்டம் மாவட்டத் தலைநகர் அரியலூரில் சிறப்பாக நடத்திட அனைத்து மத்திய தொழிற்சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் அரியலூரில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
துரைசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி.தண்டபாணி, மாரியப்பன், து. பாண்டியன், தொ.மு.ச ரெ. மகேந்திரன், சி.ஐ.டி.யு. சந்தானம், து. அருணன், ஐ.என்.டி.யு.சி. கண்ணன் மற்றும் எச்.எம்.எஸ். உட்பட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வரும் 01.05.2022 ஞாயிறு அன்று தலைநகர் அரியலூரில் மாலை 5 மணியளவில் டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில் இருந்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து தொழிலாளர்களின் பேரணி புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று அண்ணா சிலை அருகே பொதுக்கூட்டம் நடத்துவது.
பேரணியில் இசை மேளம்,தமிழர் வீர கலையான சிலம்பு விளையாட்டு சுருள் வீச்சு, ஆகியன இடம் பெறச் செய்வது. மாநில தலைவர்களும் பொதுக் கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.