சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது

Update: 2023-01-31 03:30 GMT

பைல் படம்

சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றம்  தீர்ப்பு அளித்தது.

போளூர் தாலுகா செம்மியமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 45), கூலி தொழிலாளி. கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ந் தேதி அவரது வீட்டிற்கு டி.வி. பார்க்க வந்த 4 வயதுடைய சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளார்.

வெகு நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால், சந்தேகம் அடைந்த அவரது பாட்டி சிறுமியை தேடி சென்றார். அப்போது நடந்த சம்பவம் குறித்து சிறுமி அவரது பாட்டியிடம் கூறி அழுதுள்ளார். இது குறித்து சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில், போளூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பில் வக்கீல் மைதிலி ஆஜரானார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தனது தீர்ப்பில், சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஏழுமலைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்தார். இதையடுத்து ஏழுமலையை காவல்துறையினர் வேலூர் மத்திய சிறையில்  அடைத்தனர்.

Tags:    

Similar News