அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்

அக்னி நட்சத்திரம் ஆரம்பமாவதையொட்டி அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம் நடைபெற உள்ளது

Update: 2024-05-03 23:56 GMT

 தாராபிஷேகம் - கோப்புப்படம் 

திருவண்ணாமலையில் தற்போது அதிகபட்சம் 106 டிகிரி வரை வெயில் சுட்டெரித்தது. மேலும், இயற்கையின் சமநிலையற்ற தன்மை காரணமாக இந்த ஆண்டு மேலும் வெயில் பாதிப்பு கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு அறிக்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடும் வெயிலால் மக்கள் தவிப்படைந்துள்ளனர்.

கோடை வெயிலின் உச்சமாக கருதப்படும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில், இன்று முதல் தொடங்கி, 29ம் தேதி வரை உள்ளது. அக்னி நட்சத்திரத்தின் முதல் 15 நாட்களுக்கு வெயில் அதிகமாகவும், பின்னர் கோடை மழையின் காரணமாக வெயில் பாதிப்பு படிப்படியாக குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் அக்னி நட்சத்திர காலத்தில் இறைவனின் திருமேனியை குளிர்விக்கும் விதமாக, அக்னி தோஷ நிவர்த்திக்கான தாராபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று முதல் வரும் 29ம் தேதி வரை தாராபிஷேகம் நடைபெறும்.

அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால், மூலவர்களை குளிர்விக்கும் வகையில், தாரா பாத்திரத்தை உயர தொடங்கவிட்டு, அதன் அடியில் மெல்லிய துவாரமிட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த சிறப்பு வழிபாடு பல நூற்றாண்டுகளாக நடைபெறுகிறது. பாத்திரத்தில் வெட்டிவேர், பச்சை கற்பூரம், ஏலக்காய் உள்ளிட்ட மூலிகைகளை போட்டு, அதில் பன்னீரை ஊற்றி மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

தாராபிஷேகம் நடைபெறுவதால், வழக்கமான வழிபாடுகளிலும், தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிப்பதிலும் எந்த மாற்றமும் இல்லை. வழக்கமான தினசரி வழிபாடுகள் நடைபெறும். மேலும், அக்னி நட்சத்திரத்தின் நிறைவாக 29ம் தேதி சிறப்பு யாகம் நடைபெறும். அதேபோல், கிரிவலப்பாதையில் உள்ள அடி அண்ணாமலை கோயிலிலும், திருநேர் அண்ணாமலையார் கோயிலிலும் தாராபிஷேகம் நடைபெறும்.

Tags:    

Similar News