திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு

திருவண்ணாமலையில் 105 டிகிரி வெயில் பதிவானது, பொதுமக்கள் தவிப்படைந்துள்ளனர்.

Update: 2024-04-26 00:40 GMT

பைல் படம்

திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் இயற்கையின் சமநிலையற்ற தன்மையாலும், பருவநிலை மாற்றங்களாலும் ஆண்டுதோறும் கோடை வெயில் உச்சம் தொடுகிறது. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்து வெயில் சுட்டெரிக்கிறது. எனவே, வானிலை ஆய்வு மையம் வெயில் பாதிப்பு தொடர்பாக எச்சரிக்கை விடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரிவெயில் வரும் 4 ம் தேதி தொடங்கி, 29 ம் தேதி நிறைவடைகிறது. ஆனாலும், அக்னி நடத்திரம் தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. கடந்த ஒரு வாரமாக அக்னி நட்சத்திர வெயிலை விட மிகக்கடுமையான வெயில் சுட்டெரிக்கிறது. மேலும், கோடை காலத்தில் வெப்பத்தை தணிக்கும் வகையில் எதிர்பாராமல் பெய்யும் கோடை மழையும் இதுவரை கைகொடுக்கவில்லை. எனவே, வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் தவியாய் தவிக்கின்றனர்.

105 டிகிரி வெயில்

திருவண்ணாமலையில் நேற்று கோடை வெயில் சுட்டெரித்தது. அதனால், வெயில் அளவு 105 டிகிரியாக பதிவானது. பகலில் வெயிலும், இரவில் அனல் காற்றும் வீசியது. எனவே, நேற்று பகல் 12 மணியில் இருந்து 3 மணி வரை பெரும்பாலான சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. வாகன ஓட்டிகள் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்தன. கடை வீதிகளில் கூட்டம் குறைந்தது. எனவே, பகலில் வியாபாரம் பெரிதும் பாதித்தது. மாலை 5 மணிக்கு பிறகே வியாபாரம் நடப்பதால், இரவு 10 மணி வரை கடை வீதிகளில் கடைகள் திறந்திருக்கும் நிலை காணப்படுகிறது. மேலும், குளிர்பானம், கரும்புச்சாறு, பழச்சாறு, ஐஸ்கிரீம், இளநீர், பனை நுங்கு போன்றவற்றின் விற்பனை அமோகமாக நடந்தது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து வெயில் அளவு அதிகரிக்கும் என்பதாலும், வெப்பக்காற்று வீசும் என்பதாலும், அவசியமான பணிகளை தவிர்த்து பொதுமக்கள் வெயில் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும், வெயிலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வுடன் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News