பூந்தமல்லி அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு
பூந்தமல்லி அருகே திருவேற்காடு புளியம்பேடு பகுதியில் வெல்டிங் பணியில் இருந்த இளைஞர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் இளைஞர் பாலமுருகன் (வயது 25) . இவர், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த திருவேற்காடு புளியம்பேடு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வெல்டர் ஆக பணிபுரிந்து வந்தார். இதையடுத்து நேற்று பாலமுருகன் வெல்டிங் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது.
இதனால், தூக்கி வீசப்பட்டு பாலமுருகன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு. தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பாலமுருகனை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மதுரவாயல் காவல் துறையினர் வழக்கப்பதிவு செய்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மின்சாரம் பாய்ந்து பாலமுருகன் உயிரிழந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.