ஏரியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மீஞ்சூர் அருகே நண்பர்களுடன் ஏரியில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2024-05-02 06:34 GMT

நீரில் மூழ்கி உயிரிழந்த கிரண்சிங்.

மீஞ்சூர் அருகே நண்பர்களுடன் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இன்று காலை அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

‌திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் ஊராட்சி எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வசித்து வந்தவர் கிருஷ்ணாசிங். இவரது மனைவி பிண்டுகுமாரி, இந்த தம்பதியினருக்கு நான்கு பெண் பிள்ளைகள் மற்றும் ஐந்தாவதாக ஒரே ஒரு மகன் கிரண் சிங்( வயது 23). உண்டு.


சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வந்தார். மே1.ஆம் தேதி விடுமுறை என்பதால் தனது நண்பர்களுடன் மீஞ்சூரை அடுத்த கல்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள ஏரியில் நேற்று மதியம் குளிப்பதற்காக கிரண்சிங் சென்றுள்ளார். கிரணுக்கு சரிவர நீச்சல் தெரியாத நிலையில் ஏரியின் ஆழத்தில் சென்றவர் தண்ணீரில் மூழ்கியுள்ளார்.இதனை ஏரியின் கரையின் மேற்புறத்தில் நின்று கவனித்திருந்த நண்பர்கள் கூச்சலிட்டுள்ளனர். மேலும் இவரது நண்பர்களும் தண்ணீரில் தேடி வந்த நிலையில் அவர் காணவில்லை. இச்சம்பவம் குறித்து மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பொன்னேரி தீயணைப்பு வீரர்களை அழைத்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.இரவு 7 மணி வரையும் தேடிபார்த்தும் கிரனின் உடல் கிடைக்காததால் இரவு நேரம் என்பதால் தேடும் பணியை தள்ளி வைத்தனர்.

இதனை கரைமேல் நின்று பார்த்து கதறிஅழுத பெற்றோர்கள் வேதனையுடன் வீடு திரும்பினர். தேடும் பணி நிறுத்தப்பட்ட நிலையில் இன்று காலை சடலம் ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் விரைந்து வந்து கிரண் சிங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து மீஞ்சூர் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். ஏரியில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News