கும்மிடிப்பூண்டி அருகே புதிய கான்கிரீட் சாலை அமைப்பு: எம்.எல்.ஏ.,வுக்கு ஆளுயர ரோஜா மாலை அணிவிப்பு

கும்மிடிப்பூண்டி அருகே, புதிய கான்கிரீட் சாலையை அமைத்து தந்த எம்.எல்.ஏ., கோவிந்தராஜனுக்கு, மக்கள் ஆளுயர ரோஜா மாலை அணிவித்தனர்.

Update: 2022-06-12 03:15 GMT

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் ஊராட்சியில் புதிய சாலை அமைத்து கொடுத்த எம்.எல்.ஏ., கோவிந்தராஜனுக்கு மக்கள் ரோஜா மாலை அணிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகரில் சுமார் 500.க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.இப்பகுதியில் 12 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சிமெண்ட் சாலை பழுதடைந்து கான்கிரீட் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளித்தது.

மழைக்காலங்களில் மழைநீர் வெளியே செல்ல வழி இல்லை. இதனால், மழைநீர் ஆங்காங்கு தேங்கி நின்று குளம் போல் காட்சியளிக்கும். வடிகால் கால்வாய் வசதி இல்லாததால் மழைநீர் தேங்கி, குடியிருப்புக்குள் புகுந்தன. இந்த மழை நீரில் விஷ ஜந்துகளும் வீடுகளுக்குள் ஊறும் அவல நிலை ஏற்பட்டது. மேலும் மழை பெய்தால், இப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர்.

இது குறித்து மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் பலமுறை மனு கொடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் பயனில்லை.இந்நிலையில் தி,மு.க ஆட்சி பொறுப்பேற்றதும், தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் ரூ.12.74 லட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் கான்கிரீட் சாலை மற்றும் மழைநீர் செல்ல வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டது.

இதனையடுத்து புதிய சாலை அமைப்பு பணி நிறைவடைந்த நிலையில், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் பங்கேற்று, ரிப்பன் வெட்டி சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார். 12 ஆண்டு நீண்ட போராட்டத்திற்கு பின்பு புதிய சாலை அமைத்து கொடுத்த எம்.எல்.ஏ.வுக்கு அப்பகுதியினர் மாலை அணிவித்தும், மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லோகேஷ், மாவட்ட கவுன்சிலர் சித்ரா, ஒன்றிய கவுன்சிலர் கோகிலா, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சீனிவாசன், இளைஞரணி அமைப்பாளர் சங்கர், பெரியபளையம் ஊராட்சி தலைவர் லட்சுமி, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் தனசேகரன், ராஜா, ஒன்றிய கவுன்சிலர்கள் ஜமுனா, கல்பட்டு கல்பனா வெங்கடேசன், தாராட்சி கார்த்திக், சீனிவாசன், ஹேமகுமார், மணி, பாக்கியலட்சுமி ரமேஷ் ஆறுமுகம் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Tags:    

Similar News