அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து கவரப்பேட்டையில் ரயில் மறியலுக்கு முயற்சி: மாணவர் அமைப்பினர் 30 பேர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து ரயில் மறியலில் ஈடுபட முயற்சித்த மாணவர் அமைப்பினரை காவல்துறையினர் தடுத்து, குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-06-23 09:30 GMT

கும்மிடிப்பூண்டி அருகே அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து ரயில் மறியலில் ஈடுபட முயற்சித்த மாணவர் அமைப்பினரை காவல்துறையினர் தடுத்ததால் பரபரப்பு நிலவியது.

திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். அக்னிபாத் திட்ட நகல்களையும் போராட்டத்தினர் தீயிட்டு கொளுத்தினர்

இதனை காவல்துறையினர் தடுக்க முயன்றபோது காவல்துறையினருக்கும் இளைஞர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடரந்து காவல்துறையினர் தடுப்பை மீறி கவரைப்பேட்டை ரயில் நிலையத்திற்குள் புகுந்து ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் தரதரவென இழுத்துச் சென்றும், சிலரை குண்டுக்கட்டாகவும் தூக்கியும் பேருந்தில் ஏற்றினர்.

இதையடுத்து, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சுமார் 30க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதன் காரணமாக கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Tags:    

Similar News