விளாத்திகுளத்தில் புதிய தொழிற்சாலை: 1500 பேருக்கு வேலைவாய்ப்பு - துரை வையாபுரி தகவல்

தூத்துக்குடி எம்பி கனிமொழி அனைத்துவிதமான உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக துரைவையாபுரி தெரிவித்தார்.

Update: 2021-07-09 18:46 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை தரக்கூடிய வகையில் புதிய உள்ளாடை தொழிற்சாலை தொடங்குவது தொடர்பாக மதிமுகவைச் சேர்ந்த துரை வையாபுரி மாவட்ட ஆட்சியரை இன்று ( 9.7.2021 ) நேரில் சந்தித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தொகுதியில், பெண்கள், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை தரக்கூடிய வகையில் புதிய உள்ளாடை தொழிற்சாலை அமைக்கப்படுவது தொடர்பாக, அந்த ஆலையை அமைக்க இருக்கும் தொழிலதிபர் ஆதிமூலம் மற்றும் மதிமுக துரைவையாபுரி ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜை நேரில் சந்தித்தனர்.

அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம்  துரை வையாபுரி மேலும் கூறியதாவது: தென்தமிழகத்தில் தொழிற்சாலை அமைக்க தொழிலதிபர் ஆதிமூலத்திடம்  விருப்பம் தெரிவித்தோம். அதன் பேரில் சாத்தூர் தொகுதியில் அதனை அமைக்க கேட்டோம். ஆனால் துறைமுக வசதி அருகில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் அமைத்தால் நன்றாக இருக்கும் என அவர் கூறியதை தொடர்ந்து, தொழிற்சாலைகள் ஏதும் இல்லாத, பின்தங்கிய தொகுதியாக இருக்கக்கூடிய விளாத்திகுளம் தொகுதில் அந்த தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளோம்.

இந்த ஆலை தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்குவது தொடர்பாக தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்  கனிமொழியிடம் தொடர்பு கொண்டு கூறியபோது, அவர் முழு ஆதரவை தருவதாகவும், ஆலை அமைவதற்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக  தெரிவித்துள்ளார்.

மேலும், எங்களை பொறுத்தவரையில் நாங்கள் தொழிற்சாலைக்கு எதிரானவர்கள் அல்ல, நச்சு ஆலைகளை மட்டுமே நாங்கள் எதிர்க்கின்றோம். இந்த ஆலை தொடங்கப்படும்பட்சத்தில் தொடக்கத்தில் 500 பேருக்கும், அதனைத்தொடர்ந்து ஆயிரம் முதல் ஆயிரத்து ஐநூறு பேர் வரை பணிசெய்யக்கூடிய வேலைவாய்ப்பை தரக்கூடும். குறிப்பாக இந்த தொழிற்சாலையை பொறுத்தவரை பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை தருவதாக அமையும். என தெரிவித்தார்.

Tags:    

Similar News