தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் பற்றிய நடவடிக்கைகளை பட்டியலிட்ட தமிழக அரசு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் பற்றிய நடவடிக்கைகளை தமிழக அரசு பட்டியலிட்டு உள்ளது.

Update: 2024-01-02 17:17 GMT

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் (கோப்பு படம்)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராக நீண்ட காலமாக நடந்து வந்த மக்கள் போராட்டம் கடந்த 2019ம் ஆண்டு பெரிய கலவரமாக மாறியது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்தை அடக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு இப்போது பட்டியலிட்டு உள்ளது.

அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரை அடிப்படையில் ஐபிஎஸ் அதிகாரிகள் சைலேஷ் குமார் யாதவ், கபில் குமார் சரத்கர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே வழங்கிய நிதியுடன் கூடுதலாக தலா ₹5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

ஆணைய பரிந்துரை அடிப்படையில் அப்போதைய மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டு போலீசாரால் கைதான 93 பேருக்கு தலா ₹1 லட்சம் நிவாரண தொகை வழங்கியதுடன் சிபிஐக்கு மாற்றம் செய்த வழக்கை தவிர 38 வழக்குகள் திரும்ப பெறப்பட்டது

போராட்டத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் திரும்பப்பெறப்பட்ட 38 வழக்குகளில் தொடர்பான நபர்களின் உயர்கல்வி, வேலை வாய்ப்புக்காக தடையில்லாச் சான்று வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மேற்கண்ட தகவல்கள் இடம் பெற்று உள்ளன.

துப்பாக்கி சூட்டிற்கு காரணமான அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News