தூத்துக்குடி மாவட்டம்-தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளது-அமைச்சர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் தடுப்பூசி போடுவதற்காக 26,500 தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளது என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

Update: 2021-05-24 08:37 GMT

தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி மாவட்டத்தில் 26,500 தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளது என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

கொரோனா தொற்றை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே சரியான நடவடிக்கை என்பதால் பொதுமக்கள் தடுப்பூசி போட தமிழக அரசு அறிவுருத்தி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணியை புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளிடம் அவர் கூறுகையில், கொரோனா தொற்று வீரியத்தை குறைக்க தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் எல்லா மருத்துவமனைகளிலும், ஊரகப் பகுதிகளிலும் தடுப்புசி போட்டுக் கொள்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக நகரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 7 நாட்களாக நடைபெற்ற இம்முகாம் மூலமாக 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுள்ளனர். தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் அதிகரித்து வருகிறது. அனைவருமே தடுப்பூசி போட தயாராகி வருகின்றனர் என அவர் கூறினார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆக்சிசன் வசதியுடன் கூடுதலாக 200 படுக்கைகள் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

மாவட்டத்தில் கொரோனா தொற்று அறிகுறி ஏற்பட்டுள்ளவர்கள் உடனடியாக கொரோனா பராமரிப்பு மையத்திற்கு வந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.இந்த நிகழ்ச்சிகளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையாளர் சரண்யா அறி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News