திருச்செந்தூரில் உள் வாங்கியது கடல்: கள்ளக்கடல் அறிகுறியால் பக்தர்கள் அதிர்ச்சி

திருச்செந்தூரில் திடீரென கடல் கள்ளக்கடல் போல் உள் வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Update: 2024-05-09 10:45 GMT

திருச்செந்தூரில் கடல் திடீரென உள் வாங்கியது.

திருச்செந்தூர் கடல் பகுதி கரையில் இருந்து சுமார் 100 அடி தூரம் உள்வாங்கியுள்ளது. ஆனால் ஆபத்தை உணராமல் பக்தர்கள் கடலில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்து வந்தனர். இதை கண்ட காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து அவர்களை வெளியேற்றினார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உலகப்புகழ் பெற்ற சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஆன்மீக சுற்றுலாவாக வருகிறார்கள்.. அப்படி வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிவிட்டு முருகனை தரிசனம் செய்வது வழக்கம். 

தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் மிக அதிக அளவில் கூடி இருந்தனர். கடலிலும் பக்தர்கள் புனித நீராடிக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் திருச்செந்தூரில் இன்று திடீரென 100 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. இதனால் கடலில் உள்ள பாறைகள் வெளியே தெரியத் தொடங்கின. பொதுவாக கடல் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் திருச்செந்தூரில் கடல் உள்வாங்கும். அதன்பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பும் . ஆனால் தற்போது கள்ளக்கடல் நிகழ்வு காரணமாக கடல் உள்வாங்குவதால், பொதுமக்களை போலீசார் எச்சரித்து வருகிறார்கள்.

கடல் 100 அ தூரம் உள்வாங்கிய நிலையில், ஆபத்தை உணராமல் பக்தர்கள் கடலில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்து வந்தனர். இதைகண்ட காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து அவர்களை வெளியேற்றினார்கள். தமிழக மற்றும் கேரள கடலோர பகுதிகளில் கள்ளக்கடல் ஏற்படும் நாட்களில் கடல் அலை சீற்றத்துடன் காணப்படும். எந்த முன் அறிவிப்பும் இன்றி திருடனை போல கடல் அலை திடீரென சீற்றத்துடன் வரும் என்பதைத்தான் கள்ளக்கடல் என இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் அறிவித்திருந்தது.

இதனிடையே கடலில் அலையின் வேகம் மிக அதிகமாக இருப்பதால் கோயில் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கையும் விடுக்கப்படுகிறது, கடலில் யாரும் குளிக்க கூடாது என ஒலிபெருக்கி மூலம் போலீசார் கடந்த 3 நாட்களாக அறிவுறுத்தி வருகின்றனர்.

அண்மையில் நாகர்கோவில் லெமூர் கடல் பகுதியில் திடீரென தோன்றியகள்ளக்கடல்' காரணமாக ராட்சத அலையில் சிக்கிய ஐந்து பயிற்சி டாக்டர்கள் பலியாகினர். அதன்பின்னர் கடல்களில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். தற்போதைய நிலையில் தமிழகம் முழுவதும் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. எனவே கடலில் இறங்கி குளிப்பது ஆபத்தானது என்று போலீசார் எச்சரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News