டி.என்.பி.எல். நிறுவனத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி - தொழில்துறை அமைச்சர் தகவல்.

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயிலுக்கு அமோக வரவேற்பு.

Update: 2021-05-17 14:56 GMT

தமிழகத்தில் செயல்படாமல் உள்ள தொழிற்சாலைகள் ஆக்சிஜன் உற்பத்திக்காக மீண்டும் செயல்பட வைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருவதாக துாத்துக்குடியில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவையை கருத்தில் கொண்டு தமிழக மருத்துவ கழகம் மத்திய அரசிடம் திரவ ஆக்சிஜன் அனுப்ப கோரிக்கை விடுத்தது. அந்த கோரிக்கையின் அடிப்படையில் ஒடிசா மாநிலம் ரூர்கேலா இரும்பு தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட 78.82 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகத்தின் கரோனா மருத்துவ சேவைக்காக "ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்" மூலமாக டேங்கர் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து கிளம்பி நேற்று சேலம் கோட்டம் வழியாக திண்டுக்கல்லை வந்தடைந்தது. இதையடுத்து அங்கிருந்து இன்று பிற்பகலில் கிளம்பிய "ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்" தூத்துக்குடி மீளவிட்டான் சரக்கு மாற்று ரயில்வே நிலையத்தை வந்தடைந்தது.

தூத்துக்குடி வந்த ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயிலை கனிமொழி எம்பி தலைமையில் தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், வருவாய் அலுவலர் கண்ணப்பன், தென்னக கூடுதல் ரயில்வே மேலாளர் உள்ளிட்டோர் வரவேற்று பார்வையிட்டனர்.

தொடர்ந்து ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட டேங்கர் லாரிகள் விடுவிக்கப்பட்டு அந்தந்த பகுதிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. ரயிலில் வரவழைக்கப்பட்ட 78.82 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு மருத்துவ பயன்பாட்டுக்காக பிரித்து அனுப்பப்பட்டன.


இதை தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் பேசும்போது ஆக்சிஜன் தேவைகளுக்காக தமிழகத்தில் செயல்படாமல் உள்ள தொழிற்சாலைகள் ஆக்சிஜன் உற்பத்திக்காக மீண்டும் செயல்பட வைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் ஒரு தொழிற்சாலை கண்டறியப்பட்டு அங்கு உற்பத்தி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதுபோல தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பெல் நிறுவனம் மற்றும் டிஎன்பிஎல் நிறுவனத்திலும் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்குவதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. ஆக்சிஜன் உற்பத்தி பணியை தொடங்குவதற்கு தேவையான இயந்திரம் வரவழைக்க நீண்ட நாட்கள் ஆகும் என்பதால் உற்பத்தி பணி தொடங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.

விரைவில் அதை சரி செய்து ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டு விட்டது. எனவே அங்கு மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்து தேவை உள்ள இடங்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News