தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த விராலி மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டு இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் விராலி மஞ்சளுக்கு மிக தட்டுபாடு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக தமிழக கடற்கரை வழியாக இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி முத்தையாபுரத்தை அடுத்துள்ள கோவளம் கடற்கரை பகுதியில் இலங்கைக்கு படகு மூலம் கடத்துவற்காக விராலி மஞ்சள் லாரி மூலமாக கொண்டு செல்லப்பட்டு கடல் வழியாக கடத்தப்பட உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் சென்ற போது லாரி சாலையில் சிக்கியதால் பிடிபட்டது.
இதனைத்தொடர்ந்து லாரியை சோதனை செய்த போலீசார், லாரியிலிருந்து மஞ்சள் தூள் 1.5 டன், விராலி மஞ்சள் 2.820 கிலோ, ஏலக்காய் 125 கிலோ மற்றும் சிகரெட் தாள் 125 பெட்டி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து முத்தையாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தை சார்ந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன், சாயல்குடியை சார்ந்த சுப்பிரமணியம், சாயர்புரத்தை சார்ந்த ஜெபமணி, அரிச்சந்திரன் உள்ளிட்ட நால்வரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.