15 ஆயிரம் ஆண்டு பழமையான துறைமுக நகரம் பூம்புகார்

உலக அளவிலான மூன்று துறைமுக நகரங்களில், 15 ஆயிரம் ஆண்டு பழமையான நகரம் பூம்புகார் என, பேராசிரியர் ராமசாமி தெரிவித்தார்.

Update: 2023-01-25 02:25 GMT

கடலுக்கு அடியில் நடத்திய ஆய்வில், பூம்புகார் துறைமுக நகரம், 15 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. ( கோப்பு படம்).

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில், திருச்சி, பாரதிதாசன் பல்கலையுடன் இணைந்து, பூம்புகார் பற்றிய கடல் கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பூம்புகார் ஆய்வுத்திட்டத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ராமசாமி தலைமையில், பல்கலை தொலை உணர்வுத்துறை பேராசிரியர்கள் பழநிவேல், சரவணவேல் ஆகியோர் கொண்ட குழு, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு மேற்கொண்டது.

திருச்சி, காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலை வளாகத்தில், துணை வேந்தர் செல்வம் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், கடல் கீழ் பண்டைய பூம்புகார் நகர் கண்டுபிடிப்பு பற்றி, பேராசிரியர் ராமசாமி விளக்கம் அளித்தார்.

அவர் கூறியதாவது:

உலக அளவில், இதுவரை அதிகபட்சம், 8,000 ஆண்டுகளுக்கு முந்தைய மூன்று துறைமுக நகரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது, மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 15 ஆயிரம் ஆண்டு பழமையான பூம்புகார் நகரம், கடலுக்குள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவின் மேற்கு கடற்கரையில் துவாரகாவும், கிழக்கு கடற்கரையில் பூம்புகாரும் மிகச் சிறந்த துறைமுக நகரங்களாக இருந்துள்ளன. இந்த நகரங்களில் இருந்து, தென் கிழக்கு ஆசிய நாடுகளுடனும், எகிப்து வரையிலும் கடல் வணிகத் தொடர்பு இருந்துள்ளது.

தற்போதைய கடற்கரையில் இருந்து, 40 கி.மீ.,யில், கடலுக்கு கீழே 50 - 100 மீட்டர் ஆழத்தில், 250 சதுர கி.மீ. பரப்பில், 15 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பூம்புகார் துறைமுக நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த துறைமுக நகரத்தின் அருகே, 80 கப்பல்கள் நிறுத்தும் வகையில், 30 கி.மீ., துாரத்திற்கு மிகப்பெரிய கப்பல் துறைகள், அதைச் சுற்றி பலவிதமான கட்டடங்கள் இருந்துள்ளன. இது தவிர, இந்திய செயற்கைக்கோள் படங்கள் மூலம் நடத்திய ஆய்வுகள், மாயவரம் பகுதியில் கடல் இருந்ததற்கான அடையாளங்களாக மணல் மேடுகள் தென்படுகிறது.

கடல் மட்டம் சிறிது சிறிதாக உயர்ந்து, 6,000 ஆண்டுகளுக்கு முன், மாயவரத்தை அடைந்து இருக்கலாம் என்பதற்கான தடயங்களும் உள்ளன. ஆழிப்பேரலை, சுனாமி, கடல் மட்டம் உயர்வு மற்றும் புயல் போன்ற பேரிடர் காரணங்களால், பூம்புகார் நகரங்கள் அழிந்திருக்க கூடும் எனக் கருதப்படுகிறது.இந்த ஆய்வுத் திட்டத்தில், அடுத்த கட்டமாக, 'லெமுரியா' எனும் குமரிக்கண்டம் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது

.இவ்வாறு அவர் கூறினார்.

Similar News