விளையாட்டு விடுதிகளில் மாணவ மாணவிகள் சேர வரும் 22 க்குள் விண்ணப்பிக்கலாம்

விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கு புதுக்கோட்டை மாவட்ட பள்ளி மாணவ மாணவிகள் வரும் 22 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

Update: 2022-03-18 14:00 GMT

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டை மாவட்டத்தில்  விளையாட்டு விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்வதற்கு 22.03.2022 -க்குள் விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  வெளியிட்ட தகவல்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவஃமாணவியர்களுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டுப் பள்ளிகள் பின்வரும் இடங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி: மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, இராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

மாணவியருக்கான விளையாட்டு விடுதி: ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

மேற்காணும் விளையாட்டு விடுதிகளில் உள்ள பின்வரும் விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான தேர்வு வரும் 23.03.2022 அன்று தொடங்கி 25.03.2022 முடிய நடைபெற உள்ளது. 

2022-2023ம் ஆண்டிற்கு விளையாட்டு விடுதியில் சேர்வதற்கு புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்தில் 23.03.2022 அன்று மாணவ, மாணவிகளுக்கு கீழ்க்காணும் விளையாட்டுகளில் சேர்க்கை நடைபெற உள்ளது. மாணவர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்துபந்து, பளுதூக்குதல், கபாடி, மேசைப்பந்து, டென்னிஸ், ஜூடோ, ஸ்குவாஷ் மற்றும் வில்வித்தை ஆகும். மாணவிகளுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்துபந்து, பளுதூக்குதல், கபாடி, டென்னிஸ், ஜூடோ மற்றும் ஸ்குவாஷ் ஆகும்.

மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் கொண்டுள்ள மாணவ,மாணவிகள் www.sdat.tn.gov.in  என்ற இணையதள முகவரியில் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான படிவத்தினை பூர்த்தி செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். படிவத்தினை பூர்த்தி செய்வதற்கான கடைசி நாள் 22.03.2022 மாலை 4.00 மணி ஆகும் என  அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News