விவசாயிகள் பிஎம்கிஸான் திட்டத்தில் இ-கேஒய்சி செய்வதற்கு நவ.30 கடைசி நாள்

மாவட்டத்தில் பிஎம்கிஸான் திட்டத்தில் தொடர்ந்து தவணைகள் பெறுவதற்கு இ-கேஒய்சி-யின் அவசியம் குறித்து வேளாண்துறை அறிவுறுத்தல்

Update: 2022-11-29 08:00 GMT

பைல் படம்

விவசாயிகள் பிஎம் கிஸான் திட்டத்தில் இ-கேஒய்சி செய்வதற்கு 30.11.2022 கடைசி நாள் என்று வேளாண்துறை அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிஎம் கிஸான் திட்டத்தில் தொடர்ந்து தவணைகள் பெறுவதற்கு இ-கேஒய்சி-யின் அவசியம் குறித்து புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர் மா. பெரியசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.

பிஎம்கிஸான் திட்டத்தில் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான வேளாண் இடு பொருட்களை கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசானது ஒரு விவசாய குடும்பத்திற்கு ரூ.2000- வீதம் ஆண்டுக்கு மூன்று தவணைகளாக ரூ.6000- வழங்கி வருகிறது.

இதுவரை இந்த திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு 12 தவணைகள் வரப்பெற்றுள்ளது. 13 –வது தவணை பெறுவதற்கு தங்களது ஆதார் விவரங்களைக் கொண்டு நவம்பர் 30-ம் தேதிக்குள் இ-கேஒய்சி செய்து கொள்வது அவசியமாகிறது. மேலும் தங்களது வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ள வேண்டும். இ-கேஒய்சி ஏற்கெனவே ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள், தங்களது ஆதார் எண் விவரங்களை அருகே உள்ள பொது சேவை மையம் அல்லது தபால் அலுவலகத்தின் தபால் சேவை மூலம் பிஎம் கிஸான் திட்ட வலைதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும்.

மேலும் இனிவரும் தவணை தொகைகள் அனைத்தும் ஆதார் எண் அடிப்படையில் வழங்கப்படும். எனவே பயனாளிகள் அனைவரும் தங்களது வங்கி கணக்கு உள்ள வங்கி கிளையை அணுகி வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளும்படி புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர்  மா. பெரியசாமி ஆலோசனை தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News