வங்கிகளின் கடனுதவியில் முன்னேற்றம்: வங்கியாளர்களுடன் ஆட்சியர் ஆய்வு

வங்கிகளில் கடன் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை விரைந்து முடித்து கடனுதவி வழங்க வங்கியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Update: 2021-10-13 00:53 GMT

வங்கி கடனுதவியில் முன்னேற்றம் மாவட்ட அளவிலான வங்கியாளர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட அளவிலான வங்கியாளர் கூட்டத்துக்கு தலைமை வகித்து  அவர் பேசியதாவது:புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் மூலம் பயனாளிகளுக்கு சுயதொழில் கடன், தொழில் கடன், தனிநபர் கடன், சுயஉதவிக்குழு கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வங்கிகளின் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்படும் கடனுதவி முன்னேற்றம் குறித்து இன்றைய தினம் நடைபெற்ற வங்கியாளர் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில், மகளிர் திட்டம், தாட்கோ, மாவட்ட தொழில் மையம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட கடன் விவரம் கேட்டறியப்பட்டது.வங்கிகளில் கடன் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை விரைந்து முடித்து பயனாளிகளுக்கு வங்கிக் கடன் வழங்க வங்கியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. வங்கிகளில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தவறாமல் கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொள்வதை உறுதி செய்யவும், தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தி தடுப்பூசி செலுத்தவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வங்கிகளில் வாடிக்கையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற கோவிட் தடுப்பு வழிமுறைகளை தவறாது பின்பற்றவும், அரசின் திட்டங்கள் பயனாளிகளை சென்று சேர்வதை உறுதி செய்யவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கவிதாராமு  தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரமேஷ், மாவட்ட மேலாளர் (தாட்கோ) முத்துரத்தினம், ஐஓபி காரைக்குடி மண்டல உதவி பொது மேலாளர் சங்கர், நபார்டு மேலாளர் ஜெயஸ்ரீ மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News