தாட்கோ மூலம் தீவனப்புல் வளர்க்க மானியம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

ஒரு நபருக்கு ஏக்கருக்கு ரூ.10,000- என்ற மானியம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மூலம் செயல்படுத்தப்படும்

Update: 2022-11-17 06:30 GMT

பைல்

தாட்கோ மூலம் தீவனப்புல் வளர்க்க விதைத் தொகுப்பு மற்றும் புல்கறணைகள் வாங்க மானியம் வழங்கப்படுகிறது - மாவட்ட ஆட்சித்தலைவர்  கவிதா ராமு  தகவல்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் 2022-23-ம் நிதி ஆண்டிற்கு ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க விதைத் தொகுப்பு மற்றும் புல்கறணைகள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். 18 முதல் 65 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் தீவனப்புல் மற்றும் புல்கறணைகள் வளர்க்க ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு விதிமுறைகளின்படி பரிந்துரைக்கப்படும். விவசாயிகள் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும் அல்லது உறுப்பினராக சேர வேண்டும்.

தீவன விதைகள் ஆவின் நிறுவனம் மற்றும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படும். மேலும், பயனாளிகளுக்கு விதைத் தொகுப்பு, புல்கறணைகளுடன் அத்தீவனங்களை வளர்க்க தேவையான பயிற்சி கையேடுகள் மற்றும் களப்பயிற்சி ஆகியவற்றிற்கான செலவினங்கள் ஒரு பயனாளிக்கு ஏக்கருக்கு ரூ.10,000- என்ற மானியத் தொகைக்குட்பட்டு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மூலம் செயல்படுத்தப்படும்.

மேலும், இது தொடர்பான விவரங்களை மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, காட்டு புதுகுளம், பஞ்சாயத்து யூனியன் அலுவலக சாலை புதுக்கோட்டை என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04322-221487 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

தீவனப்புல் எப்படி சாகுபடி செய்வது? தீவனப்புல் சாகுபடி செய்தால் சுற்று வட்டார கிராம மக்களின் கால்நடைகளுக்கு புல் தீவனத் தேவையைப் பூர்த்தி செய்வதன் மூலம் தினமும் வருமானம் கிடைக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? நிலத்தை முதலில் நன்றாக உழவு செய்த பின்னர் 10 டன் நன்கு மக்கிய தொழு உரம் மற்றும் டிஏபி உரம் 2 மூட்டை ஆகியவற்றை நேரடியாக போட்டு, ஒரு ஏக்கர் நிலத்துக்கு விதை கட்டிங் வாங்கி ஒரு அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.

பின்னர் 2 அல்லது 3 நாள்களுக்கு ஒரு முறை காயவிட்டு, வெப்பத்தின் அளவுக்கேற்ப நீர்ப் பாசனம் செய்ய வேண்டும்.பின்னர் ஒரு மாதம் கழித்து தீவனப்புல் நன்றாக வளர்ந்து வரும் போது ஏக்கருக்கு 50 கிலோ அளவில் யூரியாவை இரண்டாகப் பிரித்து தீவனப்புல் வெட்டுவதற்கு முன்பாக ஒரு முறையும், வெட்டியதற்கு பின்பு ஒருமுறை உரமிடும் முறையை பின்பற்றி வரலாம்.

பூச்சித் தாக்குதல் காணப்பட்டால், குறிப்பாக புகையான் தாக்குதலினால் ஏற்படும் உற்பத்தி இழப்புகளை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் அளவில் எண்ணெய் கரைசலை மண்ணுடன் கலந்து ஒரு ஏக்கர் நிலத்தில் தெளித்து கட்டுப்படுத்தலாம். இதன் வாயிலாக வேர்ப்பூச்சி தாக்குதலையும் எளிதில் கட்டுப்படுத்த முடியும். நாள் ஒன்றுக்கு 500 முதல் 600 கட்டுகள் வரை தீவனப்புல் மகசூல் கிடைக்கிறது.தினந்தோறும் புல் கட்டுகளை விற்பனை செய்தால் ஒரு கட்டு ரூ.10 என்ற விலையில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து லாபம் பெறலாம். இந்த தீவனப்புல் சாகுபடி 2 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து வருமானத்தைத் தரும்.

பனிப்பொழிவு உள்ள காலங்களில் புகையான் தாக்குதல் அதிகம் காணப்படும். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தீவனப்புல்லை அழித்து விட்டு, இரண்டு மாத காலத்துக்கு பின் மீண்டும் தீவனப்புல் மறுதாம்புப் பயிராக மீண்டும் துளிர விட்டு சாகுபடி மற்றும் அறுவடை பணிகளை தொடங்கலாம்.  காவிரி டெல்டா பாசன விவசாயிகள் குறைந்த செலவில் தீவனப்புல் சாகுபடி செய்து தினந்தோறும் அதிக லாபம் பெறலாம்.



Tags:    

Similar News