குட்கா விற்கும் கடைகளுக்கு நிரந்தர சீல்: சுகாதார துறை செயலாளர் எச்சரிக்கை

குட்கா விற்கும் கடைகளுக்கு நிரந்தர சீல் வைக்கப்படும் என சுகாதார துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2024-01-05 16:16 GMT

தமிழக சுகாதார துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி.

இனி குட்கா விற்றால் கடைகளுக்கு நிரந்தரமாக சீல் தான் என சுகாதார துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மாத்திரைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மக்கள் நல்வாழ்வுத் துறை ஏற்கெனவே கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், நேற்று இதுகுறித்து மீண்டும் ஒரு முறை சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட, 391 வகையான புகையிலை சார்ந்த பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்கள் விற்பனை தொடர்பாக கடந்த டிசம்பர் 11ம் தேதி முதல் 26ம் தேதி வரை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், 993 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், அந்த கடைகளுக்கு 37.70 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், காவல்துறை ஆய்வு நடத்தி 1,400 கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர். இதற்கு முன்னர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். அதன் பிறகும் விற்பனை செய்தால் அந்த கடைகளுக்குச் சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், தற்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், உடனடியாக அந்த கடைகளுக்கு, தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News