திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை; விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2024-10-07 01:18 GMT

 சாலையின் நடுவே விழுந்த மரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஜமுனாமரத்தூரில் 23 மி.மீ. மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை  வரை அதிகபட்சமாக ஜமுனாமரத்தூரில் 23.8 மி.மீ. மழை பதிவானது.இதுதவிர, திருவண்ணாமலையில் 13.4, செங்கத்தில் 17.4, போளூரில் 6.6, கலசப்பாக்கத்தில் 11, தண்டராம்பட்டில் 2 மில்லி மீட்டா் மழை பதிவானது.

ஆரணி பகுதியில் பலத்த மழை

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில்  மாலை காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில், ஆரணி-வந்தவாசி சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

ஆரணி பகுதியில் மாலை 5  மணிக்கு திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சிறிது நேரத்தில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமாா் 2 மணி நேரம் நீடித்த பலத்த மழையால் ஆரணியில் சாலைகள், தாழ்வான பகுதிகள், கால்வாய்களில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக மழைநீா் சாலையில் தேங்கியது.

மேலும், பலத்த காற்று வீசியதால் ஆரணி-வந்தவாசி சாலையோரத்தில் இருந்த மரம் சாலையின் நடுவே விழுந்தது. இதனால், அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த நெடுஞ்சாலை துறையினா் நிகழ்விடம் சென்று மரத்தை அகற்றி போக்குவரத்து சீரமைத்தனா்.

மிருகண்டா அணையில் வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் திறப்பு

கலசபாக்கம் பகுதியில் தொடர் மழையால் மிருகண்டா அணையில் வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் திறப்பு தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை

கலசபாக்கம் பகுதியில் தொடர் மழை காரணமாக மிருகண்டா அணையில் இருந்து பாதுகாப்பு கருதி வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசபாக்கம் உட்பட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேல் சோழங்குப்பம் கிராமத்தில் உள்ள மிருகண்டா அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் முழு கொள்ளளவு எட்டியதால் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

மேலும் மிருகண்டா நதியின் கரையோரத்தில் உள்ள காந்த பாளையம், நல்லான் பிள்ளை பெற்றான், கெங்கல மகாதேவி, சிறுவள்ளூர், வில்வாரணி, எலத்தூர் ஆகிய கிராமங்களுக்கும் மற்றும் ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர் மழை நீடித்தால் மேலும் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.

இந்நிலையில் நேற்று கலசபாக்கம் எம்எல்ஏ சரவணன் கேட்ட வரம் பாளையம், சிறுவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் மிருகண்டா நதி செல்லும் நீர்வரத்து கால்வாய்களில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஏரிகள் முழுமையாக நிரம்ப வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தினார்.

மிருகண்டா அணையில் இருந்து வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

Similar News