சத்தியமங்கலம் அருகே மின்வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூரில் மின்வேலியில் சிக்கி காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது.

Update: 2024-10-07 00:30 GMT

மின்வேலியில் சிக்கி உயிரிழந்த யானை.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட குத்தியாலத்தூர் ஊராட்சி மொசல்மடுவு என்ற இடத்தில் ஒரு தோட்டத்தை சுற்றியுள்ள மின்வேலியில் சிக்கி காட்டு யானை நேற்று (6ம் தேதி) உயிரிழந்து கிடந்தது.

அந்த வழியாக சென்றவர்கள் அதைப்பார்த்து உடனே கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் வந்த வனத்துறையினர் மற்றும் வன கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான மருத்துவ குழுவினர் உயிரிழந்து கிடந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

அதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவர் கூறும்போது, உயிரிழந்தது சுமார் 35 வயதுடைய ஆண் யானை. வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை தோட்டத்துக்குள் நுழைய முயன்றுள்ளது. அப்போது, மின்வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்து விட்டது, என்றார். இதனைத் தொடர்ந்து, யானையின் உடல் மற்ற விலங்குகளுக்கு உணவாக அங்கேயே விடப்பட்டது.

இதுகுறித்து கடம்பூர் வனத்துறையினர் தோட்டத்தில் மின்வேலி அமைத்த விவசாயியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், மொசல்மடுவு சுப்பிரமணிக்கு சொந்தமான நிலத்தை அதே பகுதியை சேர்ந்த பட்டகாரர் மணி குத்தகைக்கு எடுத்து சோளம் விதைத்து, காட்டுப்பன்றிகள் நிலத்தில் புகுவதைத் தடுக்க மின்வேலி அமைத்திருந்தார்.

இந்நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை, சோளக்காட்டில் புகுந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதனிடையே, கடம்பூர் போலீசில் மணி சரணடைந்த நிலையில், இதுகுறித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News