ரெப்போ வட்டி விகித்தை அடிக்கடி உயர்த்தினால் தொழில்கள் பாதிக்கும்: கொமதேக பொதுச்செயலாளர்

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை அடிக்கடி உயர்த்துவதால் தொழில்கள் பாதிக்கும் என்று கொமதோக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.

Update: 2022-08-06 02:30 GMT

இ.ஆர்.ஈஸ்வரன், எம்எல்ஏ.,

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ., இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இந்திய ரிசர்வ் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி வருவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். தனிமனிதர்களால் வட்டி குறைவாக இருந்த நிலையில் வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்படும். சிறு குறு நடுத்தர தொழில் நடத்தும் அனைவரையும் பாதிக்கும். வாராக்கடன் அதிகமாகும். கடந்த பல வருடங்களாக வட்டிவிகிதம் குறைவாக இருந்த காரணத்தால் தான் பலரும் தொழில் செய்ய முன் வந்தார்கள். வேலை வாய்ப்புகள் நிறைய உருவானது. மாதத்தவணையில் எல்லோரும் வீட்டிற்கு தேவையான பல பொருட்களை வாங்கினார்கள். இனி திருப்பி செலுத்துவதும் சிரமம், புதிய கடன் வாங்குவதும் சிரமம். பெட்ரோல் டீசல், சமையல் கேஸ் எரிவாயு விலை, ஜிஎஸ்டிவரி உயர்வு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள அடித்தட்டு மக்கள் வட்டி விகித உயர்வால் மேலும் பாதிக்கப்படுவார்கள்.

குறுகிய காலத்தில் 3 சதவீதத்தைத் தாண்டி வங்கி வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. மத்திய அரசு மக்களைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மிகக்குறைந்த வட்டியில் கடன் வழங்குகின்றனர். சிறு குறு நடுத்தர தொழில் செய்பவர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாது. தொழிற்சாலைகள் மூடப்பட்டு வேலையிழப்புகள் அதிகமாகும். இதை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி உடனடியாக ரெப்போ வட்டி உயர்வை வாபஸ் பெற வேண்டும். பணவீக்கத்தை கட்டுப்படுத்த மாற்று வழிகளை ஆராய வேண்டும். இதே நிலை நீடித்தால், இந்தியா பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News