நாமக்கல் அருகே வேன் மோதி விபத்து: பொறியியல் மாணவர் பரிதாப சாவு

நாமக்கல் அருகே வேன் மோதியதால் டூ வீலரில் சென்ற பொறியியல் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-09-14 05:45 GMT

பைல் படம்.

நாமக்கல் அருகே உள்ள லத்துவாடி, அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் முருகேசன், லாரி டிரைவர். இவருடைய மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு தீபக் (20), தாமோதரன் ஆகிய 2 மகன்கள் இருந்தனர். இதில் தீபக் நாமக்கல் அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், தீபக் நாமக்கல் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி அருகில் உள்ள ஏடிஎம் மையத்தில் இருந்து பணம் எடுத்துக்கொண்டு மொபட்டில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த வேன் ஒன்று மொபட் மீது மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட தீபக் படுகாயம் அடைந்தார். உயிருக்கு போராடிய அவரை, அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

புகாரின்பேரில் மோகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப்பதிவு செய்து, நல்லையகவுண்டன்புதூரைச் சேர்ந்த வேன் டிரைவர் சுதாகர் (43) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News