தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாணவர்களுக்கு அக்.2ல் பேச்சுப்போட்டி

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வரும் அக்டோபர் 2ம் தேதி பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.

Update: 2021-09-27 12:45 GMT

ஸ்ரேயாசிங், நாமக்கல் கலெக்டர்.

இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-22 ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து 2021 ம் ஆண்டு அக்டோபர் 2 ம் தேதி காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி, பள்ளி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. பள்ளி, கல்லூரி பேச்சுப் போட்டிகளில் பங்குபெறும் மாணவர்களுக்கு தனித்தனியே மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.

மேலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் போட்டியில் மட்டும் பங்கேற்ற மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத் தொகை ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.

பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி வரும் அக்டோபர் 2ம் தேதி காலை 10 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிஅக்டோபர் 2ம் தேதி மதியம் 3 மணிக்கும் நாமக்கல் அரசு தெற்கு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட உள்ளது. இதில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News