பதிவு சான்று இன்றி விதைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: துணை இயக்குனர்

பதிவு சான்று இல்லாமல் விதைகளை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2024-01-23 10:15 GMT

இது குறித்து சேலம் மண்டல விதை ஆய்வு துணை இயக்குனர் செல்வமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் பருத்தி, மக்காச்சோளம், எள், நெல், ராகி, காய்கறி பயிர்கள், பயறுவகை, எண்ணெய்வித்து மற்றும் கால்நடை தீவனப்பயிர்கள் போன்றவை அதிகப்படியாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான விதைகளை வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் வேளாண்மைத்துறை மட்டுமின்றி தனியார் விதை உற்பத்தியாளர்களும் உற்பத்தி செய்து விதைகளை விற்பனை செய்து வருகின்றனர்.

தனியார் மூலம் விற்பனை செய்யப்படும் விதைகளின் தரத்தினை உறுதி செய்யும் வகையில், சென்னை விதைச் சான்றளிப்பு மற்றும் அங்கக சான்றளிப்புத்துறை, அனைத்து தனியார் ரகம் மற்றும் வீரிய ரக விதைகளை பதிவு செய்ய வலியுறுத்தி அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் பதிவு சான்று வழங்கியுள்ளது.

இதன்படி விதை விற்பனை உரிமம் பெற்ற அனைத்து விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பதிவு சான்றினை ஒவ்வொரு தனியார் ரகத்திற்கும் உற்பத்தியாளர்களிடம் பெற்று விதை விற்பனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இச்சான்றுகளை விதை ஆய்வாளர்களிடம், ஆய்வின்போது சமர்பிக்க வேண்டும். இந்த நடைமுறைகளை முறையாக பின்பற்றாத, விதை விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது விதைச்சட்டத்தின் கீழ் விதை உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News