கேரளாவில் இருந்து வெடிமருந்து கடத்தி வந்த 3 பேர் கைது: லாரி பறிமுதல்

நாமக்கல் அருகே கேரளாவில் இருந்து வெடிமருந்து கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர்.

Update: 2022-03-14 04:45 GMT

பைல் படம்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள செல்லிபாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (38). லாரி டிரைவர். காரிப்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில் (38). இவர்கள் 2 பேரும் லைசன்ஸ் பெறாமல், ஒரு லாரியில் டெட்டனேட்டர் வெடி மருந்துகளை கடத்திச் சென்றனர். அந்த லாரி நாமக்கல் அருகே உள்ள பாப்பிநாயக்கன்பட்டி அண்ணாநகர் பகுதியில் வந்த போது, எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, ரோட்டோரம் இருந்த வீட்டு சுவரின் மீது மோதி நின்றது. இதுகுறித்து வெங்கடேசன் மற்றொரு டிரைவரான வாழப்பாடி ஏரிப்புதூர் பகுதியை சேர்ந்த ரத்தினம் (37) என்பவருக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக ஒரு காரில் சம்பவ இடத்திற்கு வந்தார்.

இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த, நல்லிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள், டிரைவர்கள் உட்பட 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கேரளாவில் இருந்து 9 ஆயிரத்து 302 சாதாரண டெட்டனேட்டர் வெடிமருந்துகளை வாங்கி, அதற்கு உரிய லைசென்ஸ் பெறாமல், கல்குவாரிகளுக்கு பயன்படுத்த, லாரியில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து லாரியுடன் டெட்டனேட்டர் வெடிமருந்துகளை பறிமுதல் செய்த போலீசார், வெங்கடேசன், செந்தில், ரத்தினம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். ரத்தினம் வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது. லாரி வீட்டு சுவரின் மீது மோதியதில் டெட்டனேட்டர் குச்சிகள் வெடித்திருந்தால், பெரும் வெடிவிபத்து ஏற்பட்டு அசம்பாவிதம் நடைபெற்றிருக்கும், அதிர்ஷ்வசமாக அது தவிர்க்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News