எஸ்சி, எஸ்டி விவசாயிகள் 100 சதவீத மானியத்தில் கிணறு அமைக்க விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் இப்பணி நடைபெற்று வருகிறது

Update: 2023-01-31 02:30 GMT

நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங்.

ஆதி திராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள், 100 சதவீத மானியத்தில் கிணறுகள் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாட்டில் பாசன நீர் ஆதாரங்களை புதிதாக உருவாக்கி அதிக பரப்பில் சாகுபடி மேற்கொண்டு விவசாயிகள் அதிக விளைச்சல் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைத்து 2022-23 ஆம் ஆண்டில் ரூ.12 கோடி செலவில் மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைத்துத் தரப்படும் என வேளாண் துறை அமைச்சர் பேரவையில் அறிவித்தார். அதன் அடிப்படையில், தமிழ்நாட்டின்  உள்ள பல்வேறு மாவட்டங்களில் பாசன நீர் வசதி இல்லாத இடங்களில் உள்ள  சிறு,குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், திட்டம் தயாரிக்கப்பட்டு, நிலத்தடி நீர் பாதுகாப்பான குறு வட்டங்களில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் செய்படுத்திட தமிழ்நாடு அரசுஆணை பிறப்பித்தது.

கலைஞரின் ஓருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021-2022-ல் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள நிலத்தடி நீர் பாதுகாப்பான குறு வட்டங்களில் உள்ள ஆதிதிராவிட சிறு குறு விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.இத்திட்டத்தின் கீழ் இடத்திற்கு ஏற்ற வாறு, குழாய் கிணறு அல்லது ஆழ் துளை கிணறு அமைத்தல், நீரினை இறைப்பதற்கு மின்சார சக்தி மூலம் இயங்கக் கூடிய பம்பு செட்டுகள் நிறுவுதல், பாசன நீரினை வீணாக்காமல் சாகுபடி செய்யப்படும் வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கு பாசன நீர் குழாய்கள் நிறுவுதல் மற்றும் நுண்ணீர் பாசன அமைப்புகளை நிறுவுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

ஆதி திராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு, 100 சதவிகித மானியத்தில் கிணறுகள் அமைத்து, சோலார் மின்சக்தி மூலம் இயக்கப்படும் பம்புசெட் அல்லது மின்மோட்டாருடன் நுண்ணீர்ப்பாசன வசதி செய்துதரப்படுகிது.

தமிழக அரசின் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் இப்பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மற்றும் மேலும் விவரம் அறிய விரும்பும் எஸ்.சி, எஸ்.டி பிரிவைச் சேர்ந்த விவசாயிகள், வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பம் அளிக்கலாம்.

நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் திருச்சி ரோட்டில், வசந்தபுரம் சிவில் சப்ளைஸ் குடோனுக்கு பின்புறம் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தில் விண்ணப்பம் செய்யலாம். மேலும், திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர்கள், திருச்செங்கோடு - சேலம் மெயின் ரோட்டில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாள அலுவலகத்திலும் விண்ணப்பம் செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News