மாயமான இரு மகள்களை மீட்டுத்தரும்படி பெற்றோர் போலீஸ் எஸ்பியிடம் மனு

மாயமான இரு மகள்களை மீட்டுத் தரும்படி நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பியிடம் பெற்றோர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2023-06-01 09:30 GMT

பைல் படம்.

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட, தும்மங்குறிச்சியைச் சேர்ந்த கேசவன் என்பவர் மாவட்ட போலீஸ் எஸ்.பி ராஜேஷ்கண்ணனிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது.

நான், எனது மனைவி செல்வி மற்றும் இரு மகள்கள், ஒரு மகனுடன் தும்மங்குறிச்சியில் வசித்து வருகிறோம். நான் கேரளாவில் மண் வெட்டி எடுக்கும் வேலை, செய்து வருகிறேன். தற்போது அங்கு மழைக்காலம் என்பதால் வேலை இல்லை. எனவே தும்மங்குறிச்சியில் எனது குடும்பத்துடன் வசித்து வருகிறேன். கடந்த 22ம் தேதி நானும் எனது மனைவி செல்வியும் கூலி வேலைக்காக வெளியே சென்றோம். திரும்பி வந்தபோது வீட்டில் இருந்த, எனது மூத்த மகள் பிரியதர்ஷினி (17), 2வது மகள் கீர்த்திகா (15) ஆகிய இருவரையும் காணவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தும் அவர்கள் கிடைக்கவில்லை.

இதுதொடர்பாக நல்லிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தோம். அங்கு பெண் குழந்தைகள் காணவில்லை என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், இதுவரை எனது இரு மகள்களும் மீட்கப்படவில்லை. அவர்கள் காணாமல் போய் 10 நாட்களுக்கு மேல் ஆனதால், இருவருக்கும் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. அதானல் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே எங்களின் இரு மகள்களையும் கண்டுபிடித்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்,என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News