நெல்- வெங்காயம் பயிர் காப்பீடு: நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு

சம்பா நெல் பயிர் ஒரு ஏக்கருக்கு ரூ.519, வெங்காயம் ஒரு ஏக்கருக்கு ரூ.1,920 வீதம் இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்த வேண்டும்

Update: 2021-09-22 10:03 GMT

பைல் படம்

நாமக்கல் மாவட்டத்தில் சம்பா நெல் பயிர் மற்றும் வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் செய்து பயன்பெறலாம்.

நாமக்கல் மாவட்டத்தில், சம்பா நெல் பயிர் மற்றும் வெங்காயம் பயிர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில், இன்சூரன்ஸ் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.  மாவட்டத்தில் 21 பிர்காக்களில் சம்பா நெல் பயிருக்கும், 6 பிர்காக்களில் வெங்காய பயிருக்கும் இன்சூரன்ஸ் செய்யலாம். கடன் பெறும் விவசாயிகள் சம்மந்தப்பட்ட வங்கிகளில் தங்களின் சுய விருப்பத்தின் பேரில், பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

கடன் பெறாத விவசாயிகள் பொதுச் சேவை மையங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பதிவு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் சம்பா நெல்பயிருக்கு டிச.15ம் தேதிக்குள்ளும், வெங்காயம் பயிரிருக்கு நவ.30ம் தேதிக்குள்ளாகவும் இன்சூரன்ஸ் செய்துகொள்ளலாம். சம்பா நெல் பயிர் ஒரு ஏக்கருக்கு ரூ.519, வெங்காயம் ஒரு ஏக்கருக்கு ரூ.1,920 வீதம் இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்த வேண்டும்.

பயிர் இன்சூரன்ஸ் விண்ணப்பத்துடன் விஏஓ அடங்கல், விதைப்பு சான்று, செயல்பாட்டில் உள்ள வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் இணைத்து, கட்டணத்தை பொதுச் சேவை மையங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் செலுத்த வேண்டும். இது சம்மந்தமான விபரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம்  என்று மாவட்ட நிர்வாகம்  தகவல் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News