ஜன.26ல் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி மனுக்களை மாலையாக அணிந்து வந்தவரால் பரபரப்பு

ஜன.26ல் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி மனுக்களை மாலையாக அணிந்து வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-12-19 01:00 GMT

பைல் படம்

ஆக்கிரமிப்பை அகற்ற தாமதம் செய்யும் அரசு அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க, வருகிற ஜனவரி மாதம் 26ம் தேதி குடியரசு தினத்தன்று, காந்திய வழியில் உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்க வேண்டும் என ஒருவர் நாமக்கல் கலெக்டர் ஆபீசில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, என்.புதுப்பட்டி பஞ்சாயத்து, மேலப்பட்டியை சேர்ந்தவர் பழனிவேல் (44). அவர், மனுக்களை மாலையாக கோர்த்து, கழுத்தில் அணிந்து கொண்டு, நாமக்கல் கலெக்டர் ஆபீசில் மனு கொடுக்க வந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அவர் கலெக்டர் ஆபீசில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

எனது வீடு அருகில், அரசுக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அவற்றை, அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல முறை புகார் மனு அளித்துள்ளேன்.

ஆனால், ஆக்கிரமிப்பை பி.டி.ஓ., அகற்றுவதா, தாசில்தார் அகற்றுவதா என்ற குழப்பத்தில் வீண் காலதாமதம் செய்து வருகின்றனர். தாசில்தாருக்கு, தாலுகா அளவிலான நீதிபதிக்கு உள்ள அதிகாரம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற காலதாமதம் செய்வது, ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு மறைமுகமாக ஊக்கப்படுத்துவதாக உள்ளது. இந்த மனுவை அவசர மனுவாக ஏற்று, சிறப்பு கவனம் செலுத்தி, ஆக்கிரமிப்பை அகற்ற போர்கால அடிப்படையில் நவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், தமிழக ஆக்கிரமிப்பு சட்டத்தின்படி, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில், நீண்டகாலமாக தாமதம் செய்தல், அலட்சியத்துடன் செயல்படுதல், அக்கறை இல்லாமல் இருக்கும் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க, வரும் 2024ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தில், காந்திய வழியில் உண்ணாவிதரம் இருக்க அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News