நாமக்கல்: உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு மானிய நிதி உதவி திட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு மானிய நிதி உதவி திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Update: 2022-12-08 12:19 GMT

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங்.

நாமக்கல் மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு, குறு நிறுவனங்கள் மானியத்துடன் நிதி உதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பாரத பிரதமரின், உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், 2020–21 முதல், 2024–25 வரை, 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம், மத்திய அரசின் மூலம் 60 சதவீதம் மானியம், மாநில அரசின் மூலம் 40 சதவீதம் மானியம், நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ஒரு மாவட்டத்துக்கு, ஒரு விளைபொருள் என்ற அணுகு முறை பின்பற்றப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் பிரதான தொழிலாக உள்ள, கோழி, முட்டை மற்றும் கோழித்தீவனம் சார்ந்த பொருட்கள் உற்பத்தி, உணவு பதப்படுத்தும் மற்றும் வேளாண் சார்ந்த மதிப்புக் கூட்டு தொழில் துவங்க விருப்பம் உள்ள தனி நபர், மகளிர் சுய உதவி குழுக்கள், உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள் மானிய உதவித்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே இத் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு, குறு நிறுவனங்களை விரிவாக்கம் செய்தல், புதிய நிறுவனங்கள் துவங்குதல், குழு அடிப்படையில் பொது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தித் தருதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில் நுட்பப் பயிற்சிகள் போன்ற இனங்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், உணவு பதப்படுத்தும் சிறு, குறு நிறுவனங்களுக்கு, தகுதியான திட்ட மதிப்பீட்டில், 10 சதவீதம் தொழில் முதலீடு மற்றும், 90 சதவீதம் கடன் பெற்று, அவற்றில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை, நாமக்கல் மாவட்டத்தில் செயல்படுத்த, விண்ணப்பங்கள் பெறவும், திட்ட அறிக்கை தயாரிக்கவும், நாமக்கல் மாவட்டத்துக்கு வள நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் https://pmfme.mofpi.gov.in/pmfme என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்யலாம்.

அல்லது உரிய ஆவணங்களுடன், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்டதொழில் மைய பொதுமேலாளர் அலுவலகத்தை, நேரிலோ அல்லது 04286-281151, 281251 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். மேலும் விண்ணப்பங்கள் குறித்த விபரங்களுக்கு நாமக்கல் மாவட்டத்தின் வள நபர்களை செல்போன் எண்கள் 88707 57380, 80128 56194 மூலம் தொடர்பு கொண்டு விண்ணப்பித்து பயனடையலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News