தமிழகக்கடனில் தன் பங்கை செலுத்த வந்த காந்தியவாதி... திகைத்துப்போனஅரசு அதிகாரிகள்

நிதியமைச்சர் அறிவித்த ஒவ்வொரு குடும்பத்திற்கான கடன் சுமைரூ. 2,63,976 - செலுத்த வந்த காந்தியவாதியால் நாமக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது

Update: 2021-08-10 08:11 GMT

தமிழக நிதியமைச்சர் அறிவித்துள்ள குடும்ப கடன் தொகை ரூ. 2,63,976 காசோலை மூலம் செலுத்த காந்தியவாதி ஒருவர் வந்ததால் நாமக்கல் சார் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில், தமிழக அரசுக்கு 5.70 லட்சம் கோடி கடன்சுமை இருப்பதாகவும், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.2,63,976 கடன் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம், பொம்மைக்குட்டைமேடு பகுதியைச்சேர்ந்த காந்தியவாதி ரமேஷ் என்பவர், முதல் நபராக தனது குடும்பத்திற்கான கடன் தொகையை செக் மூலம் செலுத்துவதற்காக நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கிருந்த சார் ஆட்சியர் கோட்டைக்குமாரை சந்தித்த அவர், தான் வைத்திருந்த ரூ.2,63,976-க்கான வங்கி காசோலையை அளித்தார். அந்த செக்கை வங்க மறுத்த சார் ஆட்சியர், அந்த காசோலையைப் பெறுவதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என்றும், உயர் அதிகாரிகளிடம் அதை வழங்குமாறும் கூறி அனுப்பி வைத்தார்.

இதைத்தொடர்ந்து, அலுவலகத்தை விட்டு வெளியே வந்த காந்தியவாதி ரமேஷ் கூறியதாவது: தமிழக நிதியமைச்சர் அறிவித்த அரசு கடன் தொகையில், எனது குடும்பத்திற்கான பங்கினை முதல் நபராக ரூ.2,63,976ஐ காசோலை மூலம் செலுத்துவதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தேன். அவர் அதை ஏற்க மறுத்து, உயர் அதிகாரிகளிடம் வழங்க கூறியுள்ளார். நான் இந்த செக்கை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்க உள்ளேன்.

பொதுமக்கள் அனைவரும் அரசு வைத்துள்ள கடனில் தங்களுக்கான பங்கை செலுத்த முன் வரவேண்டும். அப்படி செலுத்துபவர்களுக்கு, சுய தொழில் தொடங்குவதற்காக, அரசு வங்கி மூலம் ரூ.15 லட்சம் திருப்பிச் செலுத்தும் வகையில் கடனுதவி வழங்க வேண்டும்.

இதன்மூலம், பொதுமக்கள் காந்தி கண்ட கனவான கிராமப்புற பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் அனைரும் சுய தொழில் செய்து நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தமுடியும் என்று கூறினார். அரசின் கடனை செலுத்துவதாக வங்கிக் காசோலையுடன் காந்தியவாதி ரமேஷ்,மகாத்மா காந்தியைப் போல வேடமணிந்து நாமக்கல் சார் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்ததால் அங்கிருந்த சார் ஆட்சியர் உள்பட அனைவரும் திகைப்பில் ஆழ்ந்தனர்.


Tags:    

Similar News