வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அழைப்பு..

நாமக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு கிடைக்காமல் காத்திருக்கும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-24 10:15 GMT

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங். (கோப்பு படம்).

தமிழகத்தில், படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசின் சார்பில், படிப்பிற்கு ஏற்றவாறு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசின் சார்பில் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாதம் ஒன்றுக்கு, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ. 200-ம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 300-ம், பிளஸ் 2 படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 400 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ. 600 வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்பட உள்ளது.

மேலும், அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை இனி வரும் காலங்களில் மாதம் ஒன்றுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ. 600-ம், பிளஸ் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 750 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ. 1000 வீதம் 10 ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவுற்ற பதிவுதாரர்களும், மையத்தில் பதிவு செய்து ஒரு வருடம் முடிவுற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தகுதியானவர்கள் ஆவார்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், மற்றவர்கள் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரர் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை.

மனுதாரர் அரசு அல்லது தனியார் நிறுவனங்களின் மூலம் எந்தவிதமான நிதி உதவித் தொகையும் பெறுபவராக இருத்தல் கூடாது. மனுதாரர் அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவ, மாணவியராக இருத்தல் கூடாது. இந்தநிபந்தனை தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழிக் கல்வி கற்கும் மனுதாரர்களுக்கு பொருந்தாது. மனுதாரர் உதவித் தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருத்தல் வேண்டும்.

தகுதியுடையவர்கள் உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் நேரில் சென்று, பதிவு செய்து பயனடையாலம்.

சுய உறுதிமொழி ஆவணம் கொடுத்தவர்களுக்கு மட்டும் தொடர்ச்சியாக உதவித் தொகை 3 ஆண்டுகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News