கிராம சபைக்கூட்டம் நடத்த கோரி கொமதேக ஈஸ்வரன் கோரிக்கை

தமிழகம் முழுவதும் ஆக.15 ம் தேதி கிராமசபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என கொமதேக ஈஸ்வரன் கோரிக்கை.

Update: 2021-08-04 07:45 GMT

 கொமதேக ஈஸ்வரன் எம்எல்ஏ. 

தமிழகம் முழுவதும் வருகிற 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட வேண்டும் கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ, தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனா தொற்று பரவலை காரணம் காட்டி கிராம சபைக் கூட்டம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. அரசியல் காரணுங்களுக்காக கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அப்போது பலராலும் பேசப்பட்டது. கிராம சபைக் கூட்டமென்பது கிராம பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களின் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து அதை நிவர்த்தி செய்வதாகும். கிராம பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்கள் பற்றி விவாதிக்க கூடியதும் கிராம சபைக் கூட்டம் தான். அதேபோல கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களால் நிறைவேற்றப்படும் தீர்மானத்திற்கு தனி அதிகாரம் உள்ளது. தொடர்ந்து கிராம சபைக் கூட்டம் நடைபெறாத காரணத்தால் கிராம பகுதிகளின் வளர்ச்சி தடைப்பட்டுள்ளது. பொதுமக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன.

கொரோனா பரவலின் 3ஆம் அலைக்கான முன்னெச்சரிக்கை விழிப்புணர்வை ஆகஸ்ட் 15-ஆம் தேதி கிராமக் சபை கூட்டத்தின் மூலமாக கிராம பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஏற்படுத்த முடியும். தமிழக முதலமைச்சரின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் மற்றும் தமிழகத்தின் முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளையும் கிராம சபைக் கூட்டத்தின் மூலமாக தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்க முடியும். எனவே தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதலின் படி ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஒவ்வொரு கிராமத்திலும் கிராம சபைக் கூட்டத்தை நடத்திட முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News