கல்விக்கடன் வழங்குவதில் வங்கிகள் முக்கியத்துவம் அளிக்க கலெக்டர் வலியுறுத்தல்

கல்விக்கடன் வழங்குவதில் வங்கிகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்ஸ்ரேயாசிங் கூறினார்.

Update: 2022-06-30 10:30 GMT

நாமக்கல்லில் நடைபெற்ற வங்கியாளர்கள் கூட்டத்தில், ஆண்டுக்கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டார்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், வங்கியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 2022-23ம் ஆண்டுக்கான, மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் தயாரிக்கப்பட்ட ரூ.13 ஆயிரத்து 200 கோடிக்கான கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டு பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தின் 2022-23ம் ஆண்டிற்கு ரூ.13 ஆயிரத்து 200 கோடி அளவில் கடன் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. முன்னுரிமை கடன் திட்டங்களுக்காக ரூ.10 ஆயிரத்து 200கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டு கடன் திட்டத்தை விட ரூ.3 ஆயிரத்து360 கோடி அதிகமாகும். வேளாண்மை கடன் திட்டங்களுக்காக ரூ.6 ஆயிரத்து 156 கோடியும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்காக ரூ. 3 ஆயிரத்து 294 கோடியும், ஏற்றுமதி, கல்வி, வீடு கட்டுதல் உள்ளிட்ட பிற முன்னுரிமைக்கடன் திட்டங்களுக்கு ரூ. 750 கோடியும், முன்னுரிமையற்ற கடன்களுக்காக ரூ.3ஆயிரம் கோடியும் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு துறைகள் மூலம் வழங்கப்படும் மானிய கடன் திட்டங்களையும் விரைவில் செயல்படுத்த வேண்டும். குறிப்பாக வங்கிகள் அனைத்தும் மாணவ, மாணவியர் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கல்விக்கடன் வழங்குவதில் முக்கியத்துவம் அளித்து செயலாற்ற வேண்டும் என பேசினார்.

இந்தியன் வங்கியின் திருப்பூர் மண்டல மேலாளர் ஸ்ரீனிவாஸ், சென்னை ரிசர்வ் வங்கி மேலாளர் குமரன், நபார்டு வங்கி மாவட்ட மேலாளர் ரமேஷ், மகளிர் திட்ட இயக்குநர் பிரியா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட வங்கி அலுவலர்கள், பணியாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News