பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்: ஈஸ்வரன்
பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து கொமதேக பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு எம்எல்ஏவுமான இ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் 6 மாதத்திற்குள் ஊடகங்களை கட்டுப்படுத்தலாம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொண்டர்களிடையே பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. இது ஊடகங்களுக்கு விடப்பட்ட மிரட்டலாக தெரிகிறது.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் எல்.முருகன் தற்போது தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராக பொறுப்பேற்று இருப்பதால், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மிரட்டும் தொனியில் பேசியிருப்பது அதிகாரத்தின் உச்சக்கட்டம்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், எய்ம்ஸ் மருத்துவமனை கோவை பகுதிக்கு வேண்டுமென்று பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதை நிறைவேற்றும் வகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு பிரதமரிடம் பேசி, பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.