வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.;
பைல் படம்
நாமக்கல்,
வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் மாதம் ஒன்றுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ. 200, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 300, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, மாதம் ஒன்றுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ. 600, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ. 1000 வீதம் 10 ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை மாதம் தோறும் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் தற்பொழுது 1.4.2025 முதல் 30.6.2025 வரையிலான காலாண்டிற்கு மேற்கண்ட கல்வித் தகுதிகளை, மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவுற்ற பதிவுதாரார்களும், மேலும் இம்மையத்தில் பதிவு செய்து ஒரு வருடம் முடிவுற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தகுதியானவர்கள் ஆவார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், மற்றவர்கள் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரர் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை. மனுதாரார் அரசு அல்லது தனியார் நிறுவனங்களின் மூலம் எந்தவிதமான நிதி உதவித் தொகையும் பெறுபவராக இருத்தல் கூடாது. மனுதாரர் அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவ, மாணவியராக இருத்தல் கூடாது. இந்த நிபந்தனை தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழிக் கல்வி கற்கும் மனுதாரர்களுக்கு பொருந்தாது. மேலும் மனுதரார் உதவித்தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருத்தல் வேண்டும்.
மேற்கண்ட தகுதியுடையவர்கள் உடனடியாக நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். மேலும், டிஎன்வேலைவாய்ப்பு.ஜிஓவி.இன் என்ற வெப்சைட்டில் விண்ணப்பத்தினை டவுன்லோடு செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தில் 7ஆம் பக்கத்தில் விஏஓ மற்றும் ஆஐ இடம் கையொப்பம் பெற்று வரவேண்டும். சுய உறுதிமொழி ஆவணம் ஆண்டுதோறும் கொடுப்பவர்களுக்கு மட்டும் தொடர்ச்சியாக உதவித்தொகை வழங்கப்படும். இந்தஆண்டு இதுவரை சுய உறுதிமொழி ஆவணம் கொடுக்காதவர்கள் உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் உரிய படிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.