நாமக்கல்: கொரோனாவால் உயிரிழந்த 580 பேர் குடும்பங்களுக்கு நிவாரணம்

நாமக் கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த, 580 பேர் குடும்பங்களுக்கு. தலா ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-12-18 11:00 GMT

நாமக்கல் மாவட்டத்தில்,  கொரோனாவால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு உதவித்தொகை வழங்கும் நடவடிக்கைகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி வழங்க,  முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், கடந்த 8ம் தேதி தலைமை செயலகத்தில் நிவாரண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியை, அவர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும், மாவட்ட பேரிடர் மேலாண்மை துறை அலுவலகத்தில், கொரோனாவால் உயிரிழந்த நபர்களது வாரிசுதாரர்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்குவதற்கான பணிகளை கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து கலெக்டர் தெரிவித்துள்ளதாவது: கொரோனா நோய் தொற்றின் காரணமாக உயிரிழந்த நபர்களது குடும்பத்தினர், கொரோனாவால் இறந்ததற்கான இறப்பு சான்று வைத்திருந்தால் தமிழ்நாடு அரசு இன்டர்நெட் வழியாகவும், அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலித்து. நிதியுதவி வழங்கும் பணிகளை வருவாய்த்துறை அலுவலர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். நிவாரண உதவித்தொகை,  விண்ணப்பத்தாரர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால், உயிரிழந்தவர்களின் 580 பேரின் குடும்பத்தினருக்கு, ரூ.50ஆயிரம் நிதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

நிவாரணம் கோரி வரப்பெற்ற 698 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, இறப்புச்சான்றிதழ், வாரிசுதாரர் சான்றிதழ் உள்ளிட்ட அரசால் அறிவுறுத்தப்பட்ட சான்றிதழ்களை வழங்கிய 580 விண்ணப்பதாரர்களுக்கு, இதுவரை வங்கி கணக்கில் நிவாரணத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களின் விண்ணப்பங்களில் விடுபட்ட விவரங்கள் மற்றும் ஆவணங்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டு பெறப்பட்டு, மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றார்.

Tags:    

Similar News