பொங்கல் பரிசு தொகுப்புடன் தேங்காய் வழங்க கோரி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

பொங்கல் பரிசு தொகுப்புடன் தேங்காய் வழங்க கோரி நாமக்கல்லில் பா.ஜ.க. வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-01-05 06:45 GMT

பொங்கல் பரிசு தொகுப்புடன் தேங்காய் வழங்க கோரி நாமக்கல்லில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் பொங்கல் தொகுப்புடன் தேங்காய் வழங்கக்கோரி, பா.ஜ.க. சார்பில் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் முடிவில் பொதுமக்களுக்கு இலவசமாக தேங்காய்கள் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை வழங்கப்படும் என்று தமிழக அரசு முதலில் அறிவித்தது. பின்னர் விவசாயிகள் மற்றும் பா.ஜ.க.வினர் பொங்கல் தொகுப்புடன் கரும்பு மற்றும் தேங்காய் வழங்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். போராட்டத்தை தொடர்ந்து, பொங்கல் தொகுப்புடன் முழு கரும்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து தற்போது ரேசன் கடை பணியாளர்கள் மூலம் அதற்கான டோக்கன்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பொங்கல் தொகுப்புடன் தேங்காய் வழங்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. விவசாய அணி சார்பில் நாமக்கல் பார்க் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பா.ஜ.க. தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். பா.ஜ.க. மாநில விவசாய அணி துணை செயலாளர் ராதிகா, மாவட்ட விவசாய அணி தலைவர் காளியப்பன், மாநில துணைத்தலைவர் ராமசாமி, நாமக்கல் நகர தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழகம் முழுவதும் விவசாய பணிகளுக்கு ஆட்கள் தட்டுப்பாடு உள்ளதால் ஏராளமான விவசாய பணிகள் தென்னை சாகுபடி செய்யத் துவங்கியுள்ளனர். இதனால் தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளது. அடிக்கடி தேங்காய் விலை சரிவடைந்து, தேங்காய்க்கு சரியான விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மாநில அரசு தேங்காய்க்கு அடிப்படை விலை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும். மேலும் விவசாயிகளிடம் அரசே தேங்காய்களை கொள்முதல் செய்து, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் தேங்காய் வழங்க வேண்டும், ரேசன் கடைகளில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாமாயில் வழங்கப்படுகிறது. இதற்காக பல கோடி ரூபாய் அந்நியசெலாவணி செலவாகிறது. இதை தவிர்க்கும் வகையில் மாதம்தோறும் ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு  பதில், தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்ட முடிவில் மாவட்ட பா.ஜ.க. விவசாய அணி சார்பில் பொதுமக்களுக்கு சுமார் 2 ஆயிரம் தேங்காய்கள் இலவசமாக வழங்கப்பட்டன. மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் லோகேந்திரன், கல்வியாளர் பிரனவ்குமார், பழனிசாமி, உதயகுமார் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News