வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

Unemployment Benefits -வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Update: 2022-10-07 02:30 GMT

நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங்.

Unemployment Benefits -வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டள்ள செய்திக்குறிப்பில், படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும், இளைஞர்களின் துயரினை துடைக்கும் வகையில், மாதம் ஒன்றுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 400 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.600 வீதம் மூன்றாண்டு காலத்திற்கு வழங்கப்படுகிறது.

அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை இனி வரும் காலங்களில் மாதம் ஒன்றுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.600, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.1000 வீதம் 10 ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் மாதம் தோறும் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் தற்போது 1.10.2022 முதல் 31.12.2022 வரையிலான காலாண்டிற்கு உதவித் தொகை பெற, மேற்கண்ட கல்வித் தகுதிகளை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவுற்ற பதிவுதாரர்களும், மேலும் இம்மையத்தில் பதிவு செய்து ஒரு வருடம் முடிவுற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தகுதியானவர்கள் ஆவார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், மற்றவர்களை பொறுத்தவரை 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

மனுதாரர் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை. மனுதாரர் அரசு அல்லது தனியார் நிறுவனங்களின் வாயிலாக எந்தவிதமான நிதி உதவித் தொகையும் பெறுபவராக இருத்தல் கூடாது. மனுதாரர் அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவ, மாணவியராக இருத்தல் கூடாது. இந்நிபந்தனை தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழிக் கல்வி கற்கும் மனுதாரர்களுக்கு பொருந்தாது. மேலும் மனுதாரர் உதவித் தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருத்தல் வேண்டும்.

மேற்கண்ட தகுதியுடையவர்கள் உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். மேலும், டின்வேலைவாய்ப்பு.ஜிஓவி.இன் என்ற வெப்சைட்டிலும் விண்ணப்பத்தினை டவுன்லோடு செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் 7ம் பக்கத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் அலுவலரிடம் கையொப்பம் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

சுய உறுதிமொழி ஆவணம் கொடுத்தவர்களுக்கு மட்டும் தொடர்ச்சியாக உதவித் தொகை மூன்று ஆண்டுகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ந்து 10 ஆண்டுகள் மட்டும் உதவித்தொகை வழங்கப்படும். ஏற்கனவே விண்ணப்பித்து, இதுவரை சுய உறுதிமொழி ஆவணம் கொடுக்காத நபர்கள், உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் உரிய படிவத்தில் சுய உறுதிமொழி ஆவணத்தினை சமர்பிக்குமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News