நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் சீரமைக்கும் பணி

நாமக்கல்லில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Update: 2021-10-13 02:15 GMT

நாமக்கல் நகரில் புராண சிறப்பு பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி சாந்த சொரூபியாக வணங்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோயிலில், ஆஞ்சநேயர் ஜெயந்தி, அமாவாசை, பவுர்ணமி, தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட பல்வேறு விசேஷ நாட்களில் சிறப்பு அபிசேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும்.

மேலும் அனைøத்து நாட்களிலும் உள்ளூர் மட்டும் அல்லாமல் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். மேலும், ஆஞ்சநேயருக்கு பக்தர்கள் கட்டளையாக விசேஷ நாட்களில் தங்கக் கவசம், வெள்ளிக் கவசம் ,முத்தங்கி, சந்தன காப்பு, மலர் அங்கி, வெண்ணைக் காப்பு உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் செய்யப்படும்.

இந்நிலையில்,  சுவாமிக்கு சார்த்தப்படும் வெள்ளிக்கவசம் தயார் செய்து பல ஆண்டுகள் ஆனதால், ஒரு சில இடங்களில் ஒளிமங்கி காணப்பட்டது. அதை சீரமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதையொட்டி, இந்து சமய அறநிலையத்துறை நகை சரிபார்ப்பு உதவி ஆணையர் குமரேசன், கோவில் உதவி ஆணையர் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் வெள்ளிக் கவசத்திற்கு பாலிஷ் செய்யும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.

இதற்காக, தனியார் நிறுவனம் நன்கொடை அளித்துள்ளது. சேலத்தைச் சேர்ந்த சம்பத் என்ற ஸ்தபதி தலைமையில் 10க்கும் மேற்பட்ட நகை செய்யும் தொழிலாளர்கள் மூலம், ஆஞ்சநேயர் சுவாமியின் வெள்ளிக் கவசத்தை சீரமைத்து, பாலிஷ் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணி இன்று 13-ஆம் நிறைவடைந்து, நாளை 14ம் தேதி ஆயுதபூஜை அன்று சாமிக்கு சார்த்தப்படும் என்று தெரிகிறது.

Tags:    

Similar News