வெண்ணந்தூர் அருகே கடத்தி வரப்பட்ட 1,500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
வெண்ணந்தூர் அருகில் கடத்தி வரப்பட்ட 1,500 கிலோ ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, கடத்தி வந்தவரை கைது செய்தனர்.
நாமக்கல் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் எஸ்ஐ அகிலன் மற்றும் போலீசார் ராசிபுரம் தாலுக்கா வெண்ணந்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசமரம் பஸ் ஸ்டாப் அருகே உள்ள காலி இடத்தில் மூட்டை, மூட்டையாக ரேஷன்அரிசி கடத்தி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து 25 சாக்கு பைகளில் இருந்த 1,500 கிலோ ரேசன்அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுக்கா ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் மோகன் (30) என்பவர் மொபட்டில் ரேசன்அரிசி மூட்டைகளை கடத்தி வந்து அங்கு வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மோகனை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மொபட்டையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.