மதுரையில், அடகுக்கடை லாக்கரை குப்பை தொட்டியில் மறைத்து தப்பிய கொள்ளையர்

மதுரை அருகே அடகுக்கடையில் புகுந்த ஆசாமிகள், லாக்கரை உடைக்க முடியாத விரக்தியில் குப்பை தொட்டியில் மறைத்து வைத்துவிட்டு தப்பினர்.

Update: 2022-06-07 08:00 GMT

மதுரையில், கோ.புதூர் பகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதன். இவர், பாரதியார் ரோடு பகுதியில் அடகுக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நள்ளிரவில் அடகு கடையின் பூட்டை உடைத்து அடகு கடையில் இருந்த நகையை கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர்.

ஆனால், லாக்கரை உடைக்க முடியாததால், அதனை அலேக்காக தூக்கிக்கொண்டு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து வழியில் யாரும் பார்த்து விட்டால் மாட்டிக் கொள்வோம் என பயந்து போன கொள்ளையர்கள், மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைத்தொட்டியில் லாக்கர் பெட்டியை மறைத்து வைத்துள்ளனர்.

இந்நிலை அதிகாலையில் சுத்தம் செய்ய வந்த மாநகராட்சி ஊழியர்கள் லட்சுமி மற்றும் முத்து ஆகியோர் குப்பைத்தொட்டியில் லாக்கர் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் லாக்கரை கைப்பற்றினர்.

மேலும் தடயவியல் நிபுணர்கள் அழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருக்கும் சி.சி.டி.வி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு கொள்ளையர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, குப்பைத்தொட்டியில், லாக்கர் இருப்பதை கண்டவுடன் துரிதமாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த மாநகராட்சி ஊழியர்கள் லட்சுமி, முத்து ஆகிய இருவரையும் காவல்துறை அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர். 

மதுரையில், நள்ளிரவில் அடகுக்கடையில் புகுந்து கைவரிசை காட்ட நினைத்த கொள்ளையர்கள் லாக்கரை உடைக்க முடியாமல் போனதால், விரக்தி அடைந்து அதனை குப்பை தொட்டியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News